21 July 2021
by
Vijayakumaran
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் நம் நாட்டுக்கு தேவையா ?அதனால் நாட்டுக்கு என்ன பயன் ?
விளையாட்டு, விளையாட்டாக இருந்தால்தான் அது விளையாட்டு. விளையாட்டு விளையாட்டுப் போட்டியாக மாறி விட்டால் அது விளையாட்டு இல்லை, அது பொருளாதாரம் சார்ந்த விளையாட்டு தொழில்!
தமிழில் விளையாட்டு என்ற வார்த்தை என்ன ஒரு அற்புதமான வார்த்தை இதற்குப் பொருத்தமாக ஆங்கிலத்தில் sports என்று சொல்லாமல் fun என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். விளையாட்டு என்பது எந்த ஒரு கடமையையும் சுமக்காமல் சுகமாக அனுபவித்தால்தான் அது விளையாட்டு, அப்படிப்பட்ட விளையாட்டை விளையாட்டாக செய்தால்தான் அது உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
வேகமாக ஓடக்கூடிய உடல்வாக்கை கொண்ட ஒருவரை கண்டறிந்து அந்த இளைஞனுக்கும் போட்டியில் வெற்றி பெற பயிற்சி கொடுப்பது என்பது காட்டுயானையை பழக்குவதற்காக யானையை செய்யும் கொடுமைக்கு சமமானது.
வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பயிற்சி எடுக்கும் விளையாட்டு வீரர்கள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகின்றார்கள், இதனால் அவர்களுடைய வாழ்க்கையே பாதிக்கப்படுகின்றது, ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் துன்பத்தை உணர்ந்த மனிதன், விளையாட்டுப் போட்டியில் மனிதன் படும் துன்பத்தை ஏன் உணர மறுக்கின்றான். மிருகவதையை போல் இதுவும் ஒரு மனித வதைதான். இந்த வதையை விளையாட்டு வீரர்கள் விரும்பி ஏற்றுக் கொள்வதன் காரணம், அவர்கள் மனதில் விதைக்கப்படும் பண ஆசையும், புகழ் ஆசையும் தான். நாட்டுக்கு ஒருசிலர் மட்டும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறுவதால் நாட்டு மக்களுக்கு என் பயன்?
கல்வி எப்படி அனைவரின் உரிமையோ, அதுபோல் விளையாட்டும் அனைவருடைய உரிமை. விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் தான் அனைவராலும் விளையாட்டில் பங்கேற்க முடியும். விளையாட்டில் வெற்றியும்,தோல்வியும் முக்கியமல்ல என்ற நிலை உருவானால் தான் அனைத்து பிள்ளைகளும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் விளையாட்டில் பங்கேற்கும் சூழல் உருவாகும்.
விளையாட்டு என்பது உணவைப் போன்றது,ஒவ்வொரு பிள்ளைகளும் விளையாட்டில் கலந்து கொண்டால் தான் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
விளையாட்டு என்பது வெற்றியை மையமாக வைத்து இருந்தால் அது விளையாட்டே அல்ல, அது உடல் வலிமை படைத்தவர்களுக்கான போட்டியே, இதுபோன்ற போட்டியில் ஆயிரத்தில் ஒருவர் மட்டும் கலந்து கொள்வதால் இந்த மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதற்கு அரசு பணத்தை செலவு செய்ய வேண்டிய தேவையே இல்லை.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஆயிரம் பதக்கம் வாங்கினாலும் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, எந்த பெருமையும் இல்லை. ஆனால் போட்டியில்லாத விளையாட்டின் மூலம் இளைஞர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியம் பெறுவதாலும்,மருத்துவமனையில் மக்கள் கூட்டம் குறைவதாலும், உள்ளம் ஆரோக்கியத்தின் மூலம் சமுதாயத்தில் குற்றங்கள் குறைவதாலும் மட்டுமே நாட்டுக்கு நன்மையும், பெருமையும் கிடைக்கும்.
இதை உலகிலேயே முன்னோடியாக தமிழக அரசு விளையாட்டுத் துறையின் மூலம் செயல்படுத்தினால் வருங்கால சந்ததிகளாவது ஆரோக்கியமானவர்களாக வாழ்வார்கள்.
in Opinion