பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா?
ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “
நான் உன்னை விட உயர்ந்தவன், நீ என்னை விட தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு,ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சியும் உணர்வின் வெளிப்பாடு.
உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் ! மிருகத்தைவிட அறிவால் உயர்ந்து நிற்கின்றான். உணர்வை அறிவால் ஆளுமை செய்ய முடியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிருகத்திற்கு சமமானவர்கள்தான்.
ஒருவரை அடிமைப்படுத்துவதில் ஆனந்தப்படுபவர்கள் எப்படி உயர்ந்தவர்களாக இருக்க முடியும்.
அறிவால் உயர்ந்த நிலையை அடைந்த யாரும் மற்றவர்களை அடிமைப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.
உன்னை விட நான் தாழ்ந்தவன் என்று காலில் விழுந்தவருக்கு, உடல் மொழியால் வெளிப்படுத்துவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து அதன் மூலம் ஒருவர் ஆசீர்வாதம் செய்து, ஒருவேளை ஆசீர்வதித்தவருக்கு சக்தி இருந்தால் ஆசிர்வாதம் பெற்றவர் ஆசீர்வாதம் செய்தவரை விட ஒருபோதும் உயரவே முடியாது. காரணம், ஆசீர்வாதம் பெற்றவர் தனக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று ஆசீர்வதிப்பவர் விரும்புவதால். எனவே பெற்றோர்கள் தன் பிள்ளைகளை காலில் விழ வைத்து அந்த மகிழ்ச்சியில் ஆசீர்வாதம் செய்யாதீர்கள், அப்படி செய்தால் உங்களை விட உங்கள் பிள்ளைகள் உயர மாட்டார்கள்,குடும்பத்தில் வளர்ச்சி இருக்காது.
என்னை விட என்னுடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் உயர வேண்டும் என்ற மனநிலையில் அவர்களை உயர்ந்த நிலையில் வைத்து வாழ்த்துவது தான் உண்மையான ஆசீர்வாதம்.
என்னுடைய மகளின் திருமணத்தில் நான் பாத பூசை செய்து கொள்ளவில்லை, கையில் பூசை செய்ய சொல்லி தான் ஆசீர்வதித்தேன்.காரணம் இயற்கை எனும் இறைவன் எங்களுக்கு கொடுத்த பிச்சையாக நினைத்து பிள்ளைகளின் கால்களை தொட்டு வணங்கிவிட்டு இன்று அவர்களை நம் காலில் விழச் சொல்ல எப்படி மனம் வரும், இது நான் பெற்ற அறிவு அல்ல, இது பிறப்பால் என் பெற்றோர்களிடம் இருந்து நான் பெற்ற உணர்வு.