திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்வொரு பெற்றோருக்கும் பிள்ளைகள் இறைவன் போட்ட பிச்சை, தவமிருந்து பெற்ற பிள்ளைகளின் கால்களை தொட்டு வணங்கி இறைவனுக்கு நன்றி சொல்லாத பெற்றோர்களே இல்லை.
நாம் பிறக்கும் போதே பய உணர்வோடு தான் பிறக்கின்றோம் அதன் காரணத்தால் நம்மை விட உயர்ந்தவர்களை பார்த்தால் நமக்கு பயம் தானாக வருவது இயல்பு, இதன் காரணத்தால் தான் மனிதன் மற்றவர்கள் தனக்கு கீழ்படிந்து இருப்பதை விரும்புகின்றான், அதன் மூலம் பயம் இல்லாததால் ஆனந்தப்படுகின்றான். சிறு பிள்ளையாக இருந்தபோது பிள்ளைகளின் காலை தொட்டு வணங்கிய பெற்றோர்கள் பயத்தின் காரணத்தால் பிள்ளைகள் வளர்ந்த உடன் தன்னுடைய காலை தொட்டு பிள்ளைகள் வணங்குவதால் ஆனந்தப்படுகின்றார்கள்.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளை தனக்கு மேலானவர்களாக இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்துவதன் மூலம் தான் அடுத்த தலைமுறை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும், பயத்தின் காரணத்தால் பிள்ளைகளை திருமணத்தின்போது தன் காலில் பெற்றோர்கள் விழ வைப்பதால்தான் மணம்முடித்து அற்புதமான மண வாழ்க்கையை தொடங்கும் நன்னாளில் மற்றவர் காலிலும் பிள்ளைகள் விழவேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
என்னுடைய ஆய்வின்படி ஆசிர்வாதம் பெறுவதற்கும் காலில் விழுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் தன்காலில் விழுவதை விரும்புவது பயத்தின் வெளிப்பாடு.
பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை தொட்டு வணங்கி ஆசீர்வதிப்பது அன்பின் வெளிப்பாடு.