யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித்தவர், படிக்காதவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி என்னிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடமிருந்து நான் தினம் தினம் பெருகிவிட்டேன்.
அறிவும் நீரும் தாழ்வான பகுதியை நோக்கி தான் செல்லும், நம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டால் அறிவை பெற முடியாது, நம்மிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடம் தேடி கண்டறியும் போது தான் நாம் புது அறிவை பெறுகின்றோம்.
பயமும், வலியும் பிறப்பால் நாம் பெற்ற உணர்வு, பயத்தின் வெளிப்பாடுதான் பொறாமை, பயந்த சுபாவம் உள்ளவர்கள் பொறாமை படுவார்கள். செல்வத்தால், கல்வியால், ஆரோக்கியத்தால் வலிமையானவர்கள் பொறாமைப்பட மாட்டார்கள். தாழ்வு மனப்பான்மை தான் பொறாமையாக வெளிப்படுகின்றது. பயத்தால், தாழ்வு மனப்பான்மையால் பொறாமைப்படுவதால் நம்முடைய நிம்மதியை நாம் இழந்து விடுகின்றோம்.
ஒருவர் வாழும் பொழுது பாராட்டாமல் இறந்த பிறகு பாராட்டுவது பயமும், பயத்திலிருந்து விடுபட்டதுவும் தான் காரணம்.அதனால் தான் பாரதி போன்ற எழுத்தாளர்களை மற்றும் நேர்மையான, ஒழுக்கமான சமுதாய தலைவர்களை இறந்த பிறகு இந்த சமுதாயம் பாராட்டுகின்றது.
பானைக்குள் தவளைகளை போட்டால் ஒன்று கூட மேலே ஏறிவராது, ஒரு தவளை மேலே ஏற முயற்சிக்கும் பொழுது மற்றொருதவளை கீழே இழுத்துவிடும், அதுபோல்தான் மனிதர்களும் பயத்தால், பொறாமையால் யார் முன்னேறினாலும் அவர்கள் முன்னேற முடியாமல் தடையை ஏற்படுத்துவதையே தற்காப்பாக நினைக்கின்றார்கள். தனி மனிதர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை முதல் நாடுகளுக்கு இடையே ஏற்படும் யுத்தம் வரை அனைத்தும் பயத்தாலும், பயத்தால் ஏற்படும் பொறாமையாலும் நடைபெறுகின்றது.
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசாக இருந்தாலும் ஈரானை பார்த்து பயப்படுவதாலையே ஈரான் மீது போர் தொடுக்கின்றது. அமெரிக்காவிடம் உலகிலேயே மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும் இருந்தாலும் பொறாமை இல்லாமல், பயம் இல்லாமல் வாழ்வதற்கு தேவையான ஆறாவது அறிவு அவர்களிடம் இல்லை. அறிவியல் அறிவும், படிப்பறிவும் இருந்தும் மனிதர்களுக்கு இடையில் இணக்கம் இல்லை என்றால் மனிதனும் மிருகம் போல் சண்டை போட்டு சாகின்றார் என்றால் அறிவியலும், படிப்பும் மனிதனுக்கு ஆறாவது அறிவை கொடுக்கவில்லை என்று தான் பொருள்.
படித்த, அறிவியல் தெரிந்த மனிதன் ஆறறிவு மனிதன் அல்ல,நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திக்கும் மனிதனே ஆறாவது அறிவைப் பெறுகின்றான். ஆறாவது அறிவை பெற தன் நிலை மறந்து சிந்திக்க வேண்டும், நான் நானல்ல, இந்த உடல் வாழ வேண்டும் என்பதற்காகவே தன்னைத்தானே நான் என்ற உணர்வோடு வாழ்கின்றது என்ற புரிதல் நமக்குள் முதலில் வரவேண்டும். நான் என்று நம்மை நாம் நினைப்பது இந்த உடலின் உயிரின் தன்மை, இந்த உடல் இறந்து விட்டால் நான் என்ற உணர்வும் இருந்துவிடும், உயிர் என்று எதுவும் இல்லை உடலின் இயக்கத்தின் பெயர்தான் உயிர். இந்த புரிதலுக்கு சென்றவர்கள் தான் ஞானிகள் அதனால் தான் வள்ளலார் போன்ற ஞானிகள் எல்லா உயிரிடமும் தன்னை பார்த்து அனைத்து உயிர்களிடமும் அன்போடு வாழ்ந்து இருக்கின்றார்கள்.
சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது, கடந்த கால நிகழ்வுகளின் தொடர்வினையின் படி தான் நாம் சிந்திக்க முடியும். எனவே நம்முடைய சிந்தனையும், செயலும் விதிப்படிதான் நடக்கின்றது என்ற புரிதல் இரண்டாவதாக நமக்கு இருக்க வேண்டும், இந்த இரண்டு புரிதலும் ஒரு மனிதனுக்கு இருந்தால் அவன் பயம் இல்லாமல்,பொறாமை இல்லாமல் இன்பமாக வாழ முடியும்.
கடந்த கால நிகழ்வுகள் தான் விதியாக நம்மை இயக்குவதால் நம்மை சுற்றி உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர்காரர்கள், நம் நாட்டினர், பிற நாட்டினர் என்று அனைவரும் செழிப்பாக ஆனந்தமாக வாழ்ந்தால்தான் நாமும் செழிப்பாக ஆனந்தமாக வாழ முடியும் என்பது இயற்கையின் விதி.
நம்மை சுற்றி உள்ளவர்கள் நன்றாக உழைத்து அதிகம் சம்பாதிப்பதால் தான் நம்முடைய சொத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகின்றது,நம்முடைய ஊதியமும் அதிகரித்துக் கொண்டே போகின்றது,நம்மை சுற்றி உள்ளவர்கள் சம்பாதிக்கக்கூடாது என்று நாம் பொறாமை பட்டால் நாமும் கெட்டுவிடுவோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் பக்கத்து வீட்டுக்காரன் நன்றாக உழைத்து அதிகம் சம்பாதிக்கிறான் என்றால் இந்த சமுதாயம் உட்பட நாமும் அதன் பலனை அனுபவிப்போம், உழைக்காதவர்கள், முன்னேறாதவர்கள், சோம்பேறிகளால் நமக்கும் நம் சமுதாயத்துக்கும் பாரம்தான்.எனவே ஒருவருடைய முன்னேற்றத்தை பார்த்து ஆனந்தப்படுங்கள், அவர்கள் நமக்காக உழைக்கின்றார்கள் என்பதாக உணருங்கள்.
என்னுடைய அனுபவத்தில் அண்ணன்,தம்பியை பார்த்து அல்லது மற்றவர்களை பார்த்து பொறாமை பட்டவர்கள் ஆனந்தமாக வாழ்ந்தது இல்லை. எனவே யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீர்கள் பயப்படாதீர்கள். நம் கையில் எதுவும் இல்லை, விதியின்படி நம் எண்ணத்திற்கும், செயலுக்கும் ஏற்ப நமக்கு என்று உள்ளது மட்டுமே நமக்கு கிடைக்கும் பலனை எதிர்பார்க்காமல் நம்முடைய பணியை, கடமையை நாம் நேர்மையாக செய்தால் அதற்கான பலன் நிச்சயம் நமக்கு கிடைக்கும். உடலின் உணர்வின் விருப்பப்படி மிருகம் போல் வாழாமல், ஞானத்தினால் உணர்வை ஆளுமை செய்து வாழ்ந்தால் என்றும் பேரானந்தம் தான்.
ஆன்மீக நம்பிக்கையிலிருந்து விடுவித்து அறிவியல் புரிதல் மூலம் ஞானத்தை கற்றுக் கொடுக்கும் ஆய்வு கட்டுரைகள் நான் எழுதிய கட்டுரைகள் என்பதால், என்னுடைய எழுத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடைந்தால் உலகம் யுத்தம் இல்லாத ஞான பூமியாக மாறிவிடும்.
பயமில்லாமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள் நிச்சயம் அதற்கான நன்மைகளை நீங்களும் அனுபவிப்பீர்கள்! நான் எழுதிய ஆய்வு கட்டுரைகள் அனைத்தும் இணையத்தில் உள்ளது படித்து பயன்பெறுங்கள்.