3 June 2017
by
Vijayakumaran
கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்டுக்கு ஒளி அழகு, நாவலுக்கு கதை அழகு, மதத்துக்கு கோட்பாடு அழகு, கட்சிக்கு கொள்கை அழகு, தமிழுக்கு குரல் அழகு, ஆணுக்கு பண்பு அழகு, பெண்ணுக்கு அன்பு அழகு, ஆய்வுக்கு பொருள் அழகு. இது போன்ற அலங்கார எழுத்துக்கள், கவிதைகள், நாவல்கள், இலக்கியங்கள் அனைத்தும் வீட்டை அலங்கரிக்கும் அலங்கார பொருள்கள் போல்தான். அது நமக்கு பயன்படாது, ஆனால் படிப்பதற்கு இனிமையாக இருக்கும். நாம் பெற்று இருந்த அறிவையே வெவ்வேறு பார்வையில் எழுத்தாளர்கள் எழுதுவதால் அது எளிதில் நமக்கு புரிகின்றது. புரிவதால் அந்த எழுத்து நமக்கு பிடிக்கின்றது. புரியாத எழுத்துக்கள் தான் நமக்கு புதிய அறிவை கொடுக்கும். புதிய அறிவு என்பதால் தான் அந்த எழுத்து நமக்கு புரிவது இல்லை. காரணம் அறிவு இல்லாமல் அறிவை புரிந்து கொள்ள முடியாது. அறிவு பூர்வமான ஆய்வு எழுத்துக்கள் அனைத்தும் ஆயுதம் போன்றவை.அவற்றை புரிந்து கொள்ளவும், பயன்படுத்தவும் வாசகர்கள் முயல வேண்டும், அப்போது தான் அந்த எழுத்து இந்த சமுதாயத்தை புதியதாக கட்டமைக்கும். அலங்கார எழுத்துக்கள் போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை.