30 September 2022
by
Vijayakumaran
இன்றைய மத வெறுப்பு அரசியல் தொடர்ந்தால் நாடே போர்க்களமாக மாறி விடும் என்பது உறுதி. எச்சரிக்கை !
நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிவினையால் போர்க்களத்தில் தன் உயிரை விட்டவர்களின் அனாதை பிள்ளைகளின் வாரிசாக தான் இருப்போம், நம் முன்னோர்கள் குழந்தை பருவத்தில் தெரு நாயை விட அதிக கொடுமைகளை அனுபவித்து இருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். நாம் கடந்த 75 ஆண்டுகளாக தான் ஓரளவிற்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றோம். அதை நாம் இழந்துவிடக்கூடாது.
மனிதனும் மிருகமும் ஒன்றுதான், இந்த மனித மிருகத்தை அடக்குவதற்கு தான் கடவுள் நம்பிக்கையை மனிதனுக்குள் ஏற்படுத்தி மறுஜென்மம், சொர்க்கம், நரகம் என்றும். நல்லவன் தான் வாழ்வான், கெட்டவன் கெட்டு விடுவான்,என்று நீதி கதைகளை சொல்லி மனிதனை வழி நடத்தினார்கள் முன்னோர்கள்.
நாளடைவில் ஒவ்வொரு நீதிக் கதைகளும் ஒவ்வொரு மதமாக மாறிவிட்டன.
யார் ஒருவர் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் தான் உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ள ஆன்மீகவாதிகள். உளவியல் அடிப்படையில் சகமனிதனை சமமாக நடத்த வேண்டும் என்று நினைப்பது கடவுள் நம்பிக்கையின் வெளிப்பாடு, எனவே என்னுடைய பார்வையில் நாத்திகம் பேசி கொண்டு சமத்துவத்தை விரும்பும் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் ஆன்மீகவாதிகளாகவும், ஆன்மிகம் பேசிக்கொண்டு மதத்தால் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் RSS யை சார்ந்தவர்கள் நாத்திகர்களாகவும் எனக்கு தோன்றுகின்றது.
கடவுள் நம்பிக்கையின் வெளிப்பாடு வள்ளலாரை போல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பை வெளிப்படுத்துவது தான். அனைவரும் சமம் என்று நினைப்பதும் அன்பின் வெளிப்பாடுதான், எனவே தந்தை பெரியார் அவர்கள் மக்கள் மீது அன்பு கொண்டதால் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு “அனைவரும் சமம் “என்ற சமத்துவத்தை ஏற்படுத்தியதால் பெரியார் அவர்களை அவரை அறியாமலேயே கடவுள் நம்பிக்கை வழிநடத்தி இருக்கின்றது.
மிருகமாக வாழ்ந்தவனை மனிதனாக மாற்றியது கடவுள் நம்பிக்கை தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. நல்லவன்தான் வாழ்வான், கெட்டவன் கெட்டுவிடுவான் என்ற நீதியை அனைவரின் உயிரிலும் கலந்தது ஆன்மிகம் தான்.
மற்றவர்களுக்கு நன்மை செய்பவர்கள் தான் வாழ்வார்கள் கெடுதல் செய்பவர்கள் கெட்டு விடுவார்கள் என்ற ஆன்மிக நம்பிக்கை தான் இன்றளவும் அனைவரையும் வழி நடத்துகின்றது. அதனால்தான் பெரியார் நாத்திகம் பேசினாலும் அவரையும் கடவுள் நம்பிக்கையே வழிநடத்தியது.
நம் தமிழ்நாடு ஆன்மிக பூமி என்பதால் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற நாத்திக அமைப்பால் மதங்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் அனைத்து மதத்தவர்களும் அன்பு பாராட்டி வாழ்ந்தால் நம்மை இறைவன் நிச்சயம் காப்பார்.
கெட்டவனே கேடு நினைப்பான்!
இன்றைய நம் செயல் தான் நாளைய நம் விதியாக இருக்கும் !
இன்று ஒருவரை நாம் அழிக்க நினைத்தால் நாளை நாம் அழிவது விதியாக இருக்கும் !
இன்று ஒருவர் வாழ உதவினால் நாளை நாம் வாழ்வது விதியாக இருக்கும்!
இன்று மதப் பிரிவினை செய்தால் நாளை மதக்கலவரம் விதியாக இருக்கும். எச்சரிக்கை!
in Politics