13 May 2021
by
Vijayakumaran
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4000 ரூபாய் குடும்ப உதவி திட்டம் உலகம் போற்றும் சிறந்த திட்டம், இதை இலவசம் என்று நினைப்பது தவறான புரிதல். வரி கட்டுவது எப்படி தனி மனிதனின் கடமையோ அதுபோல் அரசு மக்களுக்கு உதவி செய்வதும் அரசின் கடமை.
இலவசத்திற்கும், பொருளாதார சமன்பாட்டிற்கும் வேற்றுமை உண்டு, இந்த வேற்றுமையை புரியாதவர்கள் தான் அரசு மக்களுக்கு செய்யும் நலத் திட்டங்கள் அனைத்தையும் இலவசம் என்று எண்ணுகின்றார்கள்.
அரசு ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்தால் அது இலவசம், அனைவருக்கும் கொடுத்தால் அது மக்கள் நலத்திட்டம். இலவசம் என்பது குறிப்பிட்ட சில துறையினருக்கு அல்லது பிரிவினருக்கு மட்டும் அரசு நிதி உதவியோ பொருள் உதவியோ செய்தால் அது இலவசம்.
பொருளாதார சமன்பாடு என்பது வரி அதிகம் கட்டுபவர், வரி குறைவாக கட்டுபவர் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் அரசு நிதி உதவியோ அல்லது பொருள் உதவியோ செய்தால் அது பொருளாதார சமன்பாடு.
1). மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் நடுத்தர வகுப்பிற்கு கீழ் உள்ளவர்கள் நேர் முகமாகவும், மறைமுகமாகவும் அரசுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரி கட்டுகிறார்கள்.
2) மாதம் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் நடுத்தர வகுப்பில் உள்ளவர்கள் நேர்முகமாகவும்,மறைமுகமாகவும் அரசுக்கு மாதம் 20,000/ ரூபாய் வரி கட்டுகிறார்கள்.
3) மாதம் 2 லட்சம் ரூபாய் செலவு செய்யும் உயர் வகுப்பில் உள்ளவர்கள் நேர் முகமாகவும், மறைமுகமாகவும் அரசுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டுகிறார்கள்.
மாதம் ஆயிரம் ரூபாய் வரி கட்டும் குடும்பத் தலைவனுக்கும் அரசின் உதவி 4000/ரூபாய்தான், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டும் குடும்பத் தலைவனுக்கும் அரசின் உதவி 4000 ரூபாய் தான் என்பது மக்களிடையே பொருளாதார சமன்பாட்டை ஏற்படுத்தும். இது போன்று அனைவருக்கும் கல்வியும், மருத்துவமும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தால் அதுவும் சமுதாயத்தில் பொருளாதார சமன்பாட்டை ஏற்படுத்தும்.
வாக்குக்காக, பொருளாதார சமன்பாட்டுக்கு எதிராக, பல கோடி விவசாயிகள் வறுமையில் வாடும் நிலையில் சில ஆயிரம் விவசாயிகள் கடன் வாங்கி சுகமாக இருக்கின்றவர்களின் கடனை அரசு தள்ளுபடி செய்வதும், பல லட்சம் பெற்றோர்கள் தன் உடமையை விற்று பிள்ளைகளை படிக்க வைத்த நிலையில், சுகமாக கடன் வாங்கி படித்த சில ஆயிரம் பேரின் கடனை அரசு தள்ளுபடி செய்வதும் சமுதாயத்தில் மிகப்பெரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
அரசின் திட்டம் அனைவருக்குமான திட்டமாக இருக்க வேண்டும் எனவே அரசு விவசாய கடனையும், கல்வி கடனையும் தள்ளுபடி செய்யாமல் அந்த பணத்தில் சமுதாயத்தில் பொருளாதார சமன்பாட்டை ஏற்படுத்த அனைத்து குடும்ப அட்டைக்கும் ஆதாரகுடும்ப வருவாயாக மாதம் ரூபாய் 2 ஆயிரத்தை அரசு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற திட்டத்தை அரசு செயல்படுத்தினால்தான் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும், பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தில் தான் குற்றங்கள் குறையும்.
அனைத்து விவசாயிகளுக்கும் அல்லது அனைத்து மாணவர்களுக்கும் அரசு உதவி செய்யலாம் தவறில்லை ஆனால் அரசிடம் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் தான் கடன் தள்ளுபடி என்பது சமூக நீதிக்கு எதிரானது.
in Politics