நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நம் ஜனநாயக உரிமையை பறிப்பது இட ஒதுக்கீடு, தேர்தலில் இட ஒதுக்கீடு ஜனநாயகத்துக்கு எதிரானது, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் சம உரிமை இருக்கும்போது 33 சதவீத இட ஒதுக்கீடு எதற்கு?
ஆண்களுக்கு நிகராக பெண் வாக்காளர்களும் இருப்பதால் பெண்களின் உரிமையை ஆண் எப்படி பறிக்க முடியும்?
பெண்கள் பெண்களை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில் ஏன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்?
தாழ்த்தப்பட்ட சாதியினரை போல் பெண்கள் தனி சமூகமாக இல்லாததால் ஏன் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்?
ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுத்தால்தான் நாட்டுக்கு வளர்ச்சி என்று எண்ணுவது போல் வீட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் இட ஒதுக்கீடு மூலம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஆணும்,பெண்ணும் மாறி மாறி நிர்வாகம் செய்யவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் குடும்பம் வளர்ச்சி அடையுமா?
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திறமை மிக்கவர்கள் குடும்பத்தை நிர்வகித்தால் தான் குடும்பம் முன்னேற்றம் அடையும், இதுதானே நாட்டுக்கும் பொருந்தும்.இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி என்று திறமை மிக்க பெண்கள் நாட்டை ஆள்வதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு?
வாக்காளர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்ற உரிமை தான் உண்மையான ஜனநாயகம், நான் இட ஒதுக்கீடு மூலம் நிர்ணயிக்கும் வேட்பாளரை தான் நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்பந்தத்தை ஏற்படுத்துவது ஜனநாயகம் அல்ல.
அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு யாரும் யாரை விடவும் அறிவால் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல. ஒவ்வொருவருடைய அறிவும் தனித்துவமானது, ஆனால் அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் தன்னை மட்டுமே அறிவாளியாக நினைத்துக் கொள்பவர்கள் தான் முட்டாள்கள். MPயாக தன்னை தேர்வு செய்த மக்களை அறிவு இல்லாதவர்கள் நாம்தான் அறிவாளிகள் என்று எண்ணி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MPக்களே மக்களின் ஜனநாயக உரிமையை இட ஒதுக்கீடு மூலம் பறிப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று எண்ணிப் பாருங்கள்.
நான் யாரை விடவும் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! என்ற அறிவை பற்றிய அறிவு அனைவருக்கும் இருக்க வேண்டும் அப்போதுதான் அனைவரின் கருத்தையும் நாம் உள்வாங்கிக் கொள்வோம். அனைவரின் கருத்தையும் உள்வாங்கிக் கொள்வதுதான் ஜனநாயகம்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதுதான் சரி என்று MPக்கள் முடிவு செய்யக்கூடாது,எது சரி என்று மக்கள் முடிவு செய்வார்கள் சமுதாயத்தில் விழிப்புணர்வு மூலம் அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தலாமே தவிர சட்டத்தின் மூலம் ஜனநாயக உரிமையை பறிப்பது அறிவற்ற செயல்.
தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டால் நீதித்துறை தலையிட்டு தடை செய்து ஜனநாயகத்தை காக்க வேண்டும்.